
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரி ப்ரூக் 57 ரன்களுடனும், ஜேமி ஸ்மித் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ரிஷப் பந்த் புதிய சாதனை
இங்கிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியின்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 150 கேட்ச்சுகள் பிடித்து அவர் சாதனை படைத்துள்ளார்.
பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் இங்கிலாந்து அணி வீரர் ஆலி போப், ரிஷப் பந்த்திடம் கேட்ச் ஆனார். இதுவே ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டிகளில் பிடித்த 150-வது கேட்ச் ஆகும். அதன் பின், முகமது சிராஜ் பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸும் ரிஷப் பந்த்திடம் கேட்ச் ஆனார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 256 கேட்ச்சுகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 160 கேட்ச்சுகளுடன் சையத் கிர்மானியும், 151* கேட்ச்சுகளுடன் மூன்றாவது இடத்தில் ரிஷப் பந்த்தும் உள்ளனர்.
இதையும் படிக்க: 2-வது டெஸ்ட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர் களமிறங்குகிறாரா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.