
இந்தியாவுக்கு எதிராக குரூப் ஸ்டேஜ் போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளோம் என நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் வில் யங் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. துபையில் நாளை (மார்ச் 9) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டது என்ன?
இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிராக குரூப் ஸ்டேஜ் போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளோம் என வில் யங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிராக குரூப் ஸ்டேஜ் போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம். குறிப்பாக, ஒரு பேட்ஸ்மேனாக பல விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். ஆனால், இந்திய அணி பேட்டிங் செய்ததை பார்த்த பேட்ஸ்மேன்களுக்கும் ஆட்டத்தை எப்படி கொண்டுபோக வேண்டும் என்ற அணுகுமுறை தெரிந்திருக்கும். இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது மிகப் பெரிய வாய்ப்பு. அதிலும் துபை ஆடுகளங்களில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது சவால் நிறைந்தது.
அண்மைக் காலங்களில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் கடுமையாக போட்டியிட்டுள்ளோம். இந்திய அணிக்கு எதிராக மிகப் பெரிய ஆட்டங்களில் விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், போட்டியன்று எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணியே வெற்றி பெறும். கடந்த காலங்களின் அடிப்படையில் முடிவுகள் இருப்பதில்லை. எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்றார்.
இந்தியாவுக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் போட்டியில் நியூசிலாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.