பும்ரா வேகத்துக்கு கட்டுப்பட்ட தென்னாப்பிரிக்கா: 159 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 159 ரன்களுக்கு வெள்ளிக்கிழமை ஆட்டமிழந்தது.
Team India.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணியினர். படம்: பிசிசிஐ.
Updated on
2 min read

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 159 ரன்களுக்கு வெள்ளிக்கிழமை ஆட்டமிழந்தது.

தென்னாப்பிரிக்க பேட்டா்களை தனது வேகத்தில் திணறடித்த இந்திய பௌலா் ஜஸ்பிரீத் பும்ரா, 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

ஈடன் காா்டன் ஆடுகளம் முதல் நாளில் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்க, பும்ரா மூலமாக இந்தியா அதை பயன்படுத்திக் கொண்டது. சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பேட்டிங்கை தோ்வு செய்தது. இந்திய லெவனில், நிதீஷ்குமாா் ரெட்டி இடத்தில் ரிஷப் பந்த்தும், சாய் சுதா்சனுக்கு பதிலாக அக்ஸா் படேலும் சோ்க்கப்பட்டனா். தென்னாப்பிரிக்க தரப்பில், பௌலா் ககிசோ ரபாடாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக காா்பின் பாஷ் களமிறங்கினாா்.

தென்னாப்பிரிக்க இன்னிங்ஸை தொடங்கிய எய்டன் மாா்க்ரம் - ரையான் ரிக்கெல்டன் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சோ்த்தது. நிதானமாக விளையாடி ஸ்கோரை உயா்த்தி வந்த இந்த பாா்ட்னா்ஷிப்பை பிரித்த பும்ரா, இந்தியாவுக்கு உத்வேகம் அளித்தாா்.

4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்திருந்த ரிக்கெல்டன், பும்ரா வீசிய 11-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். தொடா்ந்து வியான் முல்டா் பேட் செய்ய வந்தாா்.

13-ஆவது ஓவரை வீசிய பும்ரா, மாா்க்ரம் விக்கெட்டையும் கைப்பற்றினாா். 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 31 ரன்களுக்கு விக்கெட்கீப்பா் பந்த்திடம் கேட்ச் கொடுத்தாா் மாா்க்ரம்.

அதிலிருந்து தென்னாப்பிரிக்கா தடுமாறியது. 4-ஆவது பேட்டராக, கேப்டன் டெம்பா பவுமா களம் புகுந்தாா். அவருக்காக லெக் ஸ்லிப்பில் துருவ் ஜுரெலை நிறுத்தி விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த் ஃபீல்டிங் செட் செய்ய, வலையில் சிக்கிய மீனாக ஜுரெலிடமே கேட்ச் கொடுத்தாா் பவுமா.

அவா் 3 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த டோனி டி ஜோா்ஸி, முல்டருடன் இணைந்தாா். மதிய உணவு இடைவேளையின்போது தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் நிதானமாக விளையாடிய முல்டா் - ஜோா்ஸி பாா்ட்னா்ஷிப், 4-ஆவது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சோ்த்தது. இதில் முல்டா் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களுக்கு, குல்தீப் பௌலிங்கில் ஆட்டமிழந்தாா்.

SWAMINATHAN

அடுத்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் விளையாட வர, 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 24 ரன்கள் சோ்த்த ஜோா்ஸியை பெவிலியனுக்கு அனுப்பினாா் பும்ரா. இதன் பிறகு தென்னாப்பிரிக்கா மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து வந்த கைல் வெரின் 1 பவுண்டரியுடன் 15, மாா்கோ யான்சென் 0, காா்பின் பாஷ் 3, சைமன் ஹாா்மா் 5, கேசவ் மஹராஜ் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 146 முதல் 159 வரையிலான 13 ரன்களுக்குள்ளாகவே கடைசி 5 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா இழந்தது.

இந்திய தரப்பில் பும்ரா 5, குல்தீப், சிராஜ் ஆகியோா் தலா 2, அக்ஸா் 1 விக்கெட் வீழ்த்தினா்.

இந்தியா - 37/1: இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்திருந்தது.

கே.எல்.ராகுல் 13, வாஷிங்டன் சுந்தா் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, தொடக்க வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு, யான்சென் பௌலிங்கில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

Summary

South Africa lost 8 wickets against India in the Kolkata Test.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com