நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் குறைந்தது ஒரு மாதத்துக்கு கிரிக்கெட் விளையாட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி மும்பை வான்கடே திடலில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது.
இந்தப் போட்டியின்போது, சிஎஸ்கே வீரர் கார்த்திக் சர்மா அடித்த பந்தை கேட்ச் செய்தபோது மிட்செல் சாண்ட்னருக்கு தோள்பட்டை மற்றும் தலையில் அடிபட்டது.
இந்த நிலையில், காயம் காரணமாக அடுத்த ஒரு மாதத்துக்கு மிட்செல் சாண்ட்னர் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இது தொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மிட்செல் சாண்ட்னர் இந்த வாரம் நியூசிலாந்து வந்தடைந்தார். அவரது காயம் தொடர்பாக இன்று காலை மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் காயத்திலிருந்து குணமடைய குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக ஒரு மாதத்துக்கு கிரிக்கெட் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளதால், அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிட்செல் சாண்ட்னர் விளையாட மாட்டார். அதேபோல, இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் மிட்செல் சாண்ட்னர் விளையாடுவாரா என்பது அவரது உடல்நிலையைப் பொருத்து முடிவு செய்யப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
New Zealand captain Mitchell Santner will not play cricket for at least a month, the country's cricket board has announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










