குரூப் பி பிரிவில் ஐரோப்பிய கால்பந்து ஜாம்பவான்களான ஸ்பெயின்-போர்ச்சுகல் அணிகள் இடையிலான ஆட்டம் சோச்சியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
பலமான இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் என்பதால் உலகம் முழுவதும் இதில் யார் வெல்லுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் சோச்சி பிஷ்ட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் துவக்கம் முதலே போர்ச்சுகல் அணி ஆதிக்கம் செலுத்தியது. 4-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர்கள் செய்த பவுலால் கிடைத்த பெனால்டி மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்தார். இந்நிலையில் 24-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டீகோ கோஸ்டா சிறப்பான கிக் மூலம் பதில் கோலடித்தார். அப்போது 1-1 என சமநிலை நிலவியது. எனினும் 44-வது நிமிடத்தில் ரொனால்டோ தனது 2-வது கோலை அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியின் போது போர்ச்சுகல் 2-1 என முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாவது பாதி தொடங்கியதும் ஸ்பெயின் கோலடிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியது. இதன் பலனாக 55-வது நிமிடத்தில் டீகோ கோஸ்டா ப்ரீ கிக் முறையில் கிடைத்த வாய்ப்பின் மூலம் இரண்டாவது கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து அடுத்த 58 நிமிடத்திலேயே ஸ்பெயின் வீரர் நாச்சோ அடித்த வலுவான பந்து கோல் கம்பத்தில் பட்டு வலைக்குள் புகுந்தது. ஆட்டத்தின் 88-ஆவது நிமிடத்தில் ரொனால்டோ 3-ஆவது கோலை அடித்தார். இதன் மூலம் 3-3 என ஆட்டம் சமன் ஆனது.
ஹாட்ரிக் கோல் அடித்த ரொனால்டோவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.