கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது ஐபிஎல் போட்டியின் தொலைக்காட்சித் தரவரிசையில் 33 சதவீதம் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. 70 லீக் ஆட்டங்கள் மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புணேவில் நடைபெறவுள்ளன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடவுள்ளன. குரூப் ஏ-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி-வில் சென்னை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. சிஎஸ்கே அணி - மும்பை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. (2022 ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைந்துள்ளன.)
இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான தொலைக்காட்சித் தரவரிசை விவரங்கள் வெளியாகியுள்ளன. தொலைக்காட்சித் தரவரிசை விவரங்களை வெளியிடும் பார்க் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ஒரு தகவலின் அடிப்படையில் ஐபிஎல் 2022 போட்டியில் முதல் 8 ஆட்டங்களின் தொலைக்காட்சித் தரவரிசை 33% குறைந்துள்ளதாக அறியப்படுகிறது.
தரவரிசை குறைந்ததற்கு இம்முறை முதல்வாரத்திலேயே பகலில் ஆட்டங்கள் இருந்தது முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. பகல் ஆட்டங்களுக்கு எப்போதும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். கடந்த வருடம் முதல் வாரத்தில் பகல் ஆட்டங்கள் நடைபெறவில்லை. அதனால் அதனுடன் இப்போதைய நிலையை ஒப்பிடும்போது குறைந்தது போலத் தெரிகிறது. மேலும் அதிக ரசிகர்களைக் கொண்ட சிஎஸ்கே, மும்பை அணிகள் இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோற்றிருப்பதும் சரிவுக்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. மேலும் 2020, 2021 என இரு ஆண்டுகளிலும் கரோனா ஊரடங்கு காரணமாக ஐபிஎல் போட்டிக்கு அதிகப் பார்வையாளர்கள் கிடைத்தார்கள். இம்முறை கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் அதனாலும் தரவரிசையில் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்படுகிறது.