சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னெள சூப்பர் ஜயண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் தங்களுடைய முதல் ஆட்டத்தில் தோற்றுள்ளன.
இந்நிலையில் இரு அணிகளும் மும்பையில் இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் மோதவுள்ளன.
சிஎஸ்கே அணியில் சாண்ட்னருக்குப் பதிலாக மொயீன் அலி விளையாடவுள்ளார். மொயீன் அலியால் பவர்பிளேயிலும் பந்து வீச முடியும் என்பது சிஎஸ்கேவுக்குச் சாதகமாக அமையும். லக்னெள அணியில் இன்றும் ஹோல்டர் விளையாட மாட்டார். அடுத்த ஆட்டத்தில் தான் அணியில் இடம்பெறுவார். கடந்த ஆட்டத்தில் மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் லக்னெள அணி விளையாடியது.
அதிகமாக சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலில் லக்னெள கேப்டன் கே.எல். ராகுல்லும் தோனியும் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் சிக்ஸர் மழை பொழியுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2018 முதல் ஐபிஎல் போட்டியில் கே.எல். ராகுல்லை விடவும் வேறு யாரும் அதிக சிக்ஸர் அடித்ததில்லை. 56 இன்னிங்ஸில் 110 சிக்ஸர்கள்.
அதேபோல 2018-லிருந்து 16 முதல் 20 ஓவர்கள் வரை அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர்களில் தோனி, பாண்டியாவுக்கே முதலிடம். தோனியும் பாண்டியாவும் தலா 51 சிக்ஸர் அடித்துள்ளார்கள்.
இதனால் இன்றைய ஆட்டத்தில் சிக்ஸர் மழை அடித்தால் அதில் ஆச்சர்யம் எதுவும் இருக்குமா?