ஐபிஎல்: முதல் வாய்ப்பில் அசத்திய தமிழக வீரர் சாய் கிஷோர்

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்தியாவின் நெ.1 சுழற்பந்து வீச்சாளராக உள்ள சாய் கிஷோருக்கு...
ஐபிஎல்: முதல் வாய்ப்பில் அசத்திய தமிழக வீரர் சாய் கிஷோர்

ஐபிஎல் போட்டியில் நேற்று அறிமுகமான தமிழக வீரர் சாய் கிஷோர் முதல் வாய்ப்பில் சிறப்பாகப் பந்துவீசி அசத்தியுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பே ஐபிஎல் அணியில் இடம்பெற்றவர் சாய் கிஷோர். 2020 ஐபிஎல் ஏலத்தில் தமிழக இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோரை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அந்த வருடம் சிஎஸ்கே மோசமாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடம் பிடித்தும் சாய் கிஷோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 

அடுத்த இரு வருடங்களில் உள்ளூர் கிரிக்கெட் ஆட்டங்களில் இன்னும் அதிகமாகத் திறமையை நிரூபித்தார் சாய் கிஷோர். இதனால் இந்திய அணிக்கும் தேர்வானார். அங்கும் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.

25 வயது சாய் கிஷோர், 2020 சையத் முஷ்டாக் அலி போட்டியில் தமிழக அணி கோப்பையை வெல்ல பெரிதும் உதவினார். மிகக்குறைவான ரன்கள் கொடுத்து அசத்தினார். முக்கியமாக பவர்பிளே ஓவர்களில் இவருடைய பந்துவீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்து அதிக ரன்களை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியது. 8 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி - 4.82. நாக் அவுட் ஆட்டங்களில் சாய் கிஷோரின் பந்துகளில் எதிரணி வீரர்கள் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினார்கள். 2021 சையத் முஷ்டாக் அலி போட்டியில் 8 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகளை எடுத்து தமிழக அணி சாம்பியன் ஆக உதவினார். எகானமி - 6.06. ஐபிஎல் போட்டிக்கு முன்பு விளையாடிய 38 டி20 ஆட்டங்களில் இவருடைய பந்துவீச்சு எகானமி - 5.46. 43 விக்கெட்டுகள். 

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ. 3 கோடிக்கு சாய் கிஷோரைத் தேர்வு செய்தது பாண்டியா தலைமையிலான குஜராத் அணி. 

ஐபிஎல் 2022 ஏலத்தில் ஒரு வீரரைத் தேர்வு செய்ய அதிக அணிகள் போட்டியிட்டதில் சாய் கிஷோரும் உள்ளார். தீபக் ஹூடா, சாய் கிஷோர், டிம் டேவிட் என மூன்று வீரர்களையும் தேர்வு செய்ய அதிகபட்சமாகத் தலா 6 அணிகள் போட்டியிட்டன. சாய் கிஷோர் ரூ. 3 கோடிக்கும் டிம் டேவிட் ரூ. 8.25 கோடிக்கும் தீபக் ஹூடா ரூ. 5.75 கோடிக்கும் தேர்வானார்கள். இவர்களில் சாய் கிஷோரையும் தீபக் ஹூடாவையும் தேர்வு செய்ய சிஎஸ்கே முயன்று பிறகு தொகை அதிகமானதால் போட்டியிலிருந்து விலகியது. 

குஜராத் அணியில் ரஷித் கான் உள்ளதால் அவருக்குச் சரியான இணையாக இருப்பார் எனக் கருதப்பட்டது. ஆனால் குஜராத் அணியில் உள்ள ஆல்ரவுண்டர் ராகுல் தெவாதியாவால் மீண்டும் பெஞ்சில் அமரவேண்டிய நிலைமை சாய் கிஷோருக்கு ஏற்பட்டது. ரஷித் கான், தெவாதியா என இரு சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ள நிலையில் சாய் கிஷோருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் என பலரும் அஞ்சினார்கள். மேலும் தெவாதியா பல ஆட்டங்களில் கடைசிக்கட்டங்களில் அதிரடியாக விளையாடி குஜராத்துக்கு மகத்தான வெற்றிகளை அளித்ததால் அவரை அணியிலிருந்து நீக்கவே முடியாத நிலைமை ஏற்பட்டது. சிஎஸ்கேவில் ஜடேஜா இருப்பதால் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த சாய் கிஷோர், தற்போது அணி மாறினாலும் நிலைமை மாறாமல் இருந்தது. இதனால் சாய் கிஷோர் தொடர்ச்சியாக இந்த வருடமும் பெஞ்சில் அமரவேண்டிய சூழலே இருந்தது.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்தியாவின் நெ.1 சுழற்பந்து வீச்சாளராக உள்ள சாய் கிஷோருக்கு ஐபிஎல் போட்டியில் மட்டும் இடம் கிடைப்பது சிக்கலாக இருந்த நிலையில் லக்னெளவுக்கு எதிரான ஆட்டத்தில் திடீரென வாய்ப்பு பெற்றார். புணே ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருப்பதால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினார் குஜராத் கேப்டன் பாண்டியா.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 144 ரன்கள் எடுத்தது. லக்னெள அணி பேட்டிங் செய்தபோது சாய் கிஷோர் இங்கும் சிறிது நேரம் காத்திருக்கவேண்டியிருந்தது. 10 ஓவர்கள் வரை பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை. 11 ஆட்டங்களுக்கு பெஞ்சில் காத்திருந்த சாய் கிஷோர், 11-வது ஓவரை வீசவந்தார். அப்போது லக்னெள அணி, 58/4 எனத் தடுமாறிக் கொண்டிருந்தது. சாய் கிஷோர் அற்புதமாக ஒரு கேட்ச் பிடித்து டி காக்கை வெளியேற்றினார். தனது முதல் ஓவரில் இளம் வீரர் ஆயுஷ் பதோனியை 8 ரன்களில் வீழ்த்தினார் சாய் கிஷோர். அடுத்த ஓவரில் மொசின் கானை 1 ரன்னில் வெளியேற்றினார். அவ்வளவுதான். 2 ஓவர்கள் வீசி 7 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள். இதுதான் சாய் கிஷோரின் ஐபிஎல் அறிமுகம். 

ஆட்டம் முடிந்த பிறகு, பரிசளிப்பு விழாவில் சாய் கிஷோர் பற்றி குஜராத் கேப்டன் பாண்டியா கூறியதாவது:

சாய் கிஷோரைச் சிறந்த இடக்கை சுழற்பந்துவீச்சாளராகக் கருதுகிறேன். நன்குப் பந்துவீசக் கூடியவர். அவருடைய உயரம் மற்றும் வேகத்தினால் ஆடுகளத்திலிருந்து கூடுதல் பலனைப் பெறுகிறார். வேகப்பந்து வீச்சாளர்களைச் சேர்க்கவேண்டியிருந்ததால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாமல் இருந்தது. இந்த ஆடுகளத்தில் அதிக வலது கை பேட்டர்களுக்கு எதிராக அவரை விளையாட வைக்க எண்ணினோம். இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் எனக் கணித்தோம் என்றார்.

அடுத்தடுத்த ஆட்டங்களில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதமாக இருக்கும் நிலையில் சாய் கிஷோர் கூடுதல் வாய்ப்புகளைப் பெறுவார். இல்லாவிட்டால் மீண்டும் வாய்ப்பு கிடைப்பது கடினம். வாய்ப்புகள் எந்தச் சந்தர்ப்பத்திலும் வரலாம். முதல் ஆட்டத்தில் நன்குப் பந்துவீசியுள்ளார் சாய் கிஷோர். இனி வரும் வாய்ப்புகளும் அவருடைய திறமையை மேலும் வெளிப்படுத்தும் விதமாக அமையவேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com