ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் சதம் அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லர், விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.
18.1 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் சதமடித்து 106 ரன்கள் விளாசினார்.
இதையும் படிக்க | குஜராத்துடன் மோதுவது ராஜஸ்தான்: பெங்களூருக்கு மீண்டும் ஏமாற்றம்
நடப்பு ஐபிஎல் சீசனில் மட்டும் இது பட்லரின் 4-வது சதம். இதன்மூலம், ஒரு டி20 தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை பட்லர் சமன் செய்தார். கோலி 2016-இல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 4 சதங்களை விளாசினார். மேலும் அதே ஐபிஎல் சீசனில் அவர் மொத்தம் 973 ரன்கள் குவித்தார்.
நடப்பு சீசனில் பட்லர் 4 சதம், 4 அரைசதம் உள்பட மொத்தம் 824 ரன்கள் விளாசியுள்ளார். பேட்டிங் சராசரி 58.86, ஸ்டிரைக் ரேட் 151.47.
இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது.