லக்னௌ அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஆட்ட நாயகன் விருது பெற்றது குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
ஐபிஎல் போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை அதன் மண்ணிலேயே செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
லக்னௌ அணியின் இளம் வீரர் மயங்க் யாதவ் இந்த ஐபிஎல் தொடரின் அதிவேகமான பந்தை வீசியுள்ளார். 157 கி.மீ/ மணி வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ளார்.
முதல் போட்டியில் 3 விக்கெட் 27 ரன்கள், 2வது போட்டியில் 3 விக்கெட் 14 ரன்கள் எடுத்து தனது முதல் 2 போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருது வாங்கி அசத்தி வருகிறார் மயங்க் யாதவ்.
ஆட்டநாயகன் விருது பெற்ற மயங்க் யாதவ் பேசியதாவது:
உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இது சிறிய தொடக்கமாக உணர்கிறேன். இந்தியாவுக்காக விளையாட வேண்டும். கேமரூன் கிரீன் விக்கெட்டினை மிகவும் கொண்டாடினேன். 2 போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருது வாங்கியதைவிட் அணி 2 போட்டிகளிலும் வென்றதே முக்கியமானதாக பார்க்கிறேன். உணவுக் கட்டுப்பாடு, தூக்கம், பயிற்சி என வேகமாக பந்து வீச பல்வேறு முக்கியமான காரணிகள் இருக்கின்றன. நான் அதிகமாக எனது உணவுக் கட்டுபாட்டிலும் எப்படி புத்துணர்வு அடைவது (ஐஸ் குளியல்) என்பதில் கவனம் செலுத்துகிறேன் என்று பேசினார்.
வீரர்கள் பாராட்டு மழையில் மயங்க் யாதவ்:
டு பிளெஸ்ஸி இவரை, “வேகத்துடன் கட்டுப்பாடான லைன், லெந்தில் வீசுவது சிறப்பான விசயம்” எனப் பாராட்டினார்.
ஸ்டீவ் ஸ்மித், “பார்டர் கவாஸ்கர் கோப்பையில் மயங்க் யாதவ் விளையாட வேண்டும். அவரது ஓவரை நான் எதிர்கொள்ள விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாகுவாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பும்ரா, ஷமி, மயங்க் யாதவ் விளையாடினால் புதிய தாக்கம் இருக்குமெனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கூறிவருகிறார்கள்.