சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கவர்த்தி பேசியுள்ள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை தவறாக புரிந்து கொண்டதே தோல்விக்கு காரணம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கவர்த்தி பேசியுள்ள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: போட்டிக்கான ஆடுகளத்தைப் பார்த்தபோது, சமமான ஆடுகளம் போன்று தெரிந்தது. ஆனால், போட்டியின்போது ஆடுகளமானது வித்தியாசமாக இருந்தது. ஆடுகளத்தை கொஞ்சம் நன்றாக மதிப்பிட்டிருக்கலாம். போட்டியின் தொடக்கத்தில் ஆடுகளம் மெதுவாக இருந்தது. பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. 160 ரன்கள் எடுத்திருந்தால் நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். ஆடுகளத்தில் போட்டியின் பிற்பகுதியில் பனிப் பொழிவு இருந்ததால், பந்துவீசுவது கடினமாக இருந்தது என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.