சன் ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சிஎஸ்கே முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே களமிறங்கினர். ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் கேப்டன் ருதுராஜுடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அதன்பின் களமிறங்கிய ஷிவம் துபே தனது வழக்கமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 2 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவர் 54 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஷிவம் துபே 20 பந்துகளில் 39 ரன்கள் (ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள்) எடுத்தும், எம்.எஸ்.தோனி 5 ரன்கள் (ஒரு பவுண்டரி) எடுத்தும் களத்தில் இருந்தனர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்துள்ளது. சன் ரைசர்ஸ் தரப்பில் புவனேஸ்வர் குமார், நடராஜன் மற்றும் ஜெயதேவ் உனத்கட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.