
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ முதலில் பேட் செய்தது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்துள்ளது. தேவ்தத் படிக்கல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தாலும், கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் விக்கெட்டினை இழக்காமல் நிதானமாக விளையாடினர். இருப்பினும், ஸ்டாய்னிஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் தீபக் ஹூடா 11 ரன்களில் ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை சிறப்பாக விளையாடியது. நிக்கோலஸ் பூரன் அதிரடியில் மிரட்ட, கே.எல்.ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பூரன் சிக்ஸர் மழையை பொழிந்தார். இருவரும் அரைசதம் எடுத்து அசத்தினர். கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 55 ரன்கள் (3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக சிக்ஸர்களை விளையாசிய நிக்கோலஸ் பூரன் 29 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து நுவான் துஷாரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும்.
மும்பை தரப்பில் நுவான் துஷாரா மற்றும் பியூஸ் சாவ்லா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.