
ஐபிஎல் தொடருடன் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் நடைபெறும் மாதங்களில் சர்வதேசப் போட்டிகள் பெரிதாக நடைபெறாததால், ஐபிஎல் தொடருடன் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் தொடரினையும் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக கிரிக்கெட் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ஐபிஎல் தொடர் நடத்தப்படும் மாதங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் நடத்தப்பட்டால், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் உலகின் சிறந்த வீரர்கள் விளையாடுவதற்கான வாய்ப்பு உருவாகும். ஐபிஎல் போட்டிகளில் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் பங்கேற்கும் நன்மையும் இருக்கிறது. வருகிற 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாத இடைவெளியில் சர்வதேச கிரிக்கெட் அட்டவணையில் நிறைய தொடர்கள் இருக்கின்றன.
அதனால், ஐபிஎல் தொடர் நடத்தப்படும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் நடத்தப்பட்டால் சிறப்பானதாக இருக்கும். அதில் மேலும் ஒரு நன்மையும் இருக்கிறது. ஐபிஎல் தொடர் இரண்டரை மாதங்கள் நடைபெறுவது. ஆனால், பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒரு மாதத்துக்குள் முடிவடைந்துவிடும். வருகிற 2026 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் புதிதாக இரண்டு அணிகளைச் சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் கடந்த 2016 ஆம் ஆண்டு துபையில் தொடங்கப்பட்டது. இந்தத் தொடர் பொதுவாக ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்படுகிறது. வருகிற 2025 ஆம் ஆண்டுடன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.