
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா அவரது பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும் என சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சிளார் எரிக் சிமன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறியது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சிஎஸ்கேவின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவரான மதீஷா பதிரானாவுக்கும் இந்த சீசன் சரியாக அமையவில்லை. இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 9 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். அவரது எகானமி 10.39 ஆக உள்ளது. மேலும், இந்த சீசனில் அவர் நிறைய அகலப் பந்துகளை (வைட் பால்ஸ்) வீசி வருகிறார்.
என்ன சொல்கிறார் எரிக் சிமன்ஸ்?
சென்னை சூப்பர் கிங்ஸின் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிராவின் பந்துவீச்சு குறித்து அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிமன்ஸ் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
மதீஷா பதிரானாவின் பந்துவீச்சு குறித்து எரிக் சிமன்ஸ் பேசியதாவது: பதிரானாவின் பந்துவீச்சு ஆக்ஷனில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அவர் தொடர்ச்சியாக குறிப்பிட்ட உயரத்தில் இருந்து பந்தினை நன்றாக வீசுகிறார். அவர் துல்லியமாக பந்துவீசவில்லையா என்பதை என்னால் உறுதிபட கூற முடியாது. அவரது பந்துவீச்சுக்கு எதிராக நன்றாக விளையாட பேட்டர்கள் பழகிக்கொண்டுவிட்டார்கள். அவருக்கு எதிராக பேட்டர்கள் நன்றாக விளையாட பழகிவிட்டார்கள். குறிப்பாக, மும்பைக்கு எதிரான போட்டியின்போது, பேட்டர்கள் அவரது பந்துவீச்சில் நன்றாக விளையாடினார்கள்.
பந்துவீச்சில் பதிரானா பயன்படுத்தும் யுக்திகளை பேட்டர்கள் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு விளையாடுகிறார்கள். அதனால், பதிரானா எப்படி பந்துவீசப் போகிறார் என்பதை அவர்களால் எளிதில் கணிக்க முடிகிறது. போட்டிகளில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு பதிரானா அவரது பந்துவீச்சில் மாற்றங்களை கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.