ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை: இந்தியாவின் பூஜா ராணி காலிறுதியில் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துச்சண்டையில் 75 கிலோ பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிச்சுற்றில் தோல்வியடைந்தார்.
இதற்கு முந்தைய போட்டியில் அல்ஜீரியாவின் இச்ரக் சாயிப்பை 5-0 என முற்றிலுமாக வீழ்த்தினார் தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் பூஜா ராணி. இரு முறை ஆசிய சாம்பியனான பூஜா ராணி, தனது காலிறுதியில் இரு முறை ஆசிய சாம்பியனும், 2018 உலக சாம்பியனுமான சீனாவின் லீ கியானை எதிர்கொண்டார். இதற்கு முன்பு சீன வீராங்கனைக்கு எதிராக இரு போட்டிகளிலும் பூஜா தோல்வியடைந்துள்ளார். இதனால் பதக்கத்தை நெருங்க அவர் மிகவும் போராட வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய லீ கியான், பூஜா ராணியை 5-0 என்கிற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். பூஜா ராணி இதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்திருந்தால் ஒலிம்பிக் பதக்கம் உறுதியாகியிருக்கும். எனினும் தனது முதல் ஒலிம்பிக்கில் பதக்கத்துக்கு அருகில் சென்ற பூஜா ராணிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.