விராட் கோலிக்கும் அவருடைய காதலி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியானதற்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.
விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த சிலவருடங்களாகக் காதலித்துவருகிறார்கள். விடுமுறையைக் கழிக்க இருவரும் டெஹாராடூன் சென்றார்கள். அங்கு கிறிஸ்துமஸும் புத்தாண்டும் கொண்டாட முடிவு செய்துள்ளார்கள்.
இந்நிலையில் ஜனவரி 1-ம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கு விராட் கோலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவு செய்ததாவது:
நாங்கள் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளவில்லை. அப்படிச் செய்ய இருந்தால் அதை எல்லோருக்கும் சொல்வேன். மறைக்கமாட்டேன். அவ்வளவுதான். செய்தித் தொலைக்காட்சிகள், வதந்தியான செய்திகளைச் சொல்லி உங்களைக் குழப்புவதால் இதைச் சொல்லவேண்டியிருக்கிறது என்று கூறியுள்ளார்.