ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை - கர்நாடகம், தில்லி - மத்திய பிரதேசம், கேரளம் - விதர்பா, குஜராத் - மேற்கு வங்கம் ஆகிய அணிகள் இடையேயான காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கியுள்ளன.
அனைவரும் எதிர்பார்க்கும் மும்பை - கர்நாடகம் அணிகளுக்கு இடையேயான காலிறுதிப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் ஹாட்ரிக் எடுத்து அசத்தியுள்ளார்.
நாகபுரியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் ஓவரின் கடைசிப் பந்தில் பிருத்வி ஷாவின் விக்கெட்டை எடுத்த வினய் குமார் தனது அடுத்த ஓவரின் முதல் இரு பந்துகளில் பிஸ்டா, ஆகாஷ் பர்கர் ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை செய்துள்ளார். இதனால் ஏழு ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது மும்பை.
வினய் குமார் எடுத்த முதல் மூன்று விக்கெட்டுகளில் இரண்டு விக்கெட்டுகள் கருண் நாயரின் ஸ்லிப் கேட்ச்சுகள் மூலமாகக் கிடைத்தன. இந்திய அணி ஸ்லிப் கேட்சுகளில் தடுமாறி வருகிற நிலையில் கருண் நாயரின் ஸ்லிப் கேட்சுகள் ஆச்சர்யத்தை உண்டுபண்ணியுள்ளன.
முதல் நாள் உணவு இடைவேளையின்போது மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. வினய் குமார் இதுவரை நான்கு விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
33 வயது வினய் குமார், இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக 2013-ல் இந்திய அணியில் பங்கேற்றார். அதன்பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த ஹாட்ரிக் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.