மேத்யூஸ் சதம் வீண்: 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

மொஹாலியில் நடைபெற்ற 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
மேத்யூஸ் சதம் வீண்: 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையில் 2-ஆவது ஒருநாள் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு முதல் சர்வதேசப் போட்டியாகும்.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசர பெரேரா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் விளாசியது.

முதல் விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன் ஜோடி 115 ரன்கள் குவித்தது. பின்னர் 68 ரன்களுக்கு தவன் வெளியேறினார். 2-ஆவது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் ஐயர், ரோஹித் ஷர்மா ஜோடி 213 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 88 ரன்களுக்கு வெளியேறினார்.

இந்நிலையில், மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் ஷ்ரமா, இரட்டைச் சதம் விளாசினார். மொத்தம் 153 பந்துகளைச் சந்தித்து 12 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 208 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

ஒருநாள் போட்டிகளில் ரோஹித்துக்கு 16-ஆவது சதமாகும். 3-ஆவது இரட்டைச் சதமாகும். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் 4-ஆம் இடம்பிடித்தார்.

393 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் அனுபவ வீரர் மேத்யூஸ் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். 132 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்களின் உதவியுடன் 111 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் தனியாகப் போராடினார். இதர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வீழ்ந்தனர். 

இதனால் இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார், பாண்டியா, சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

முதல் போட்டியில் ஏற்பட்ட படுதோல்விக்கு 141 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி பதிலடி அளித்தது. மேலும் 1-1 என்ற கணக்கில் தொடரிலும் சமநிலைப் பெற்றது. இந்தத் தொடரின் 3-ஆவது மற்றும் கடைசிப் போட்டி விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com