இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையில் 2-ஆவது ஒருநாள் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசர பெரேரா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தது.
இப்போட்டி இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் அவரது மனைவி ரித்திக்காவுக்கு முக்கியப் போட்டியாக அமைந்தது. இதில், ரோஹித் செய்த காரியத்தால் அவரது மனைவி மைதானத்திலேயே கண்கலங்கினார்.
முதல் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பதிலடி தரும் விதத்தில் இந்திய வீரர்கள் விளையாடினர். தவன், ஷ்ரேயாஸ் மற்றும் கேப்டன் ரோஹித் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டு ரன்களைக் குவித்தனர். ஷிகர் தவன் 68 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 88 ரன்களும் எடுத்தனர்.
கேப்டன் ரோஹித் ஷர்மா இரட்டைச் சதம் விளாசினார். மொத்தம் 153 பந்துகளைச் சந்தித்து 12 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 208 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
முதல் போட்டியைப் போன்று இதிலும் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ரித்திகா, ரோஹித் ஷர்மா இரட்டைச் சதம் விளாசியதைக் கண்டு மகிழ்ந்து கண்கலங்கினார். அதிலும் இன்று (டிசம்பர் 13-ந் தேதி) இவர்களது திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது.