இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையில் 2-ஆவது ஒருநாள் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது. இதில், இந்திய அணிக்காக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், முதல் போட்டியில் களமிறங்கினார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசர பெரேரா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் ஷிகர் தவன் மற்றும் ரோஹித் ஷ்ரமா ஜோடி களமிறங்கி சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தித் தந்தது.
ஷிகர் தவன் 68 ரன்களுக்கு வெளியேறினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா அதிரடியாக சதம் விளாசினார்.
இது ஒருநாள் போட்டிகளில் ரோஹித்துக்கு 16-ஆவது சதமாகும். இதன்மூலம் வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்தார். மேலும் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் 4-ஆம் இடம்பிடித்தார்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் ஷ்ரமா, ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் ஒரே ஓவரில் 4 இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 150 ரன்களை எளிதாகக் கடந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 88 ரன்களுக்கு வெளியேறினார்.
இந்நிலையில், மறுமுனையில் சிக்ஸர்களை விளாசித் தள்ளிய ரோஹித் ஷர்மா, இரட்டைச் சதம் விளாசினார். மொத்தம் 153 பந்துகளைச் சந்தித்து 12 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 208 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தது.