இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீரராக விளங்கும் சுஷில்குமார், 2018 காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க வெள்ளிக்கிழமை தகுதிபெற்றார்.
டிசம்பர் 29-ந் தேதி நடைபெற்ற 74 கிலோ எடைப் பிரிவு தகுதிச் சுற்றுப்போட்டியில் ஜிதேந்தர் குமாரை வீழ்த்தி இந்தப் போட்டித் தொடருக்குள் நுழைந்தார்.
இவர், 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார். பின்னர் 2010-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த தனிநபர் இரண்டு பதக்கங்களை வெல்வது இதுவே முதன்முறையாகும். அதுமட்டுமல்லாமல் கடந்த 1952-ம் ஆண்டுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த விளையாட்டில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார்.
இதற்கிடையில் 2009-ம் ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்னர் 2010-ம் ஆண்டில் உலக மல்யுத்த சாம்பியன் பட்டத்தையும், 2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 74 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
இதன்பிறகு ஏற்பட்ட காயம் காரணமாக 2015-ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இருந்து விலகினார். இதனால் ரியோ ஒலிம்பிக் வாய்ப்பும் பறிபோனது. மேலும் சில சர்ச்சைகளில் சிக்கியதால் சிறிது காலம் போட்டிகளில் பங்கேற்காமல் விலகியிருந்தார்.
இந்நிலையில், 2017 கடைசி காலகட்டத்தில் மீண்டும் களமிறங்கிய சுஷில்குமார், தற்போது 2018 காமன்வெல்த் போட்டிகளுக்கு தேர்வானது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.