இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 500 ரன்கள் குவித்து தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளது.
இலங்கையின் காலே நகரில் புதன்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா அறிமுக வீரராக களமிறங்கினார். இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஷிகர் தவன் 168 பந்துகளில் 31 பவுண்டரிகளுடன் 190 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். புஜாரா 247 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 144, ரஹானே 94 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 39 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்கள். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.
இந்நிலையில் இன்று 257 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார் புஜாரா. தவன் தவறவிட்ட இரட்டைச் சதத்தை புஜாரா எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதீப் பந்துவீச்சில் 153 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரஹானேவும் 57 ரன்களில் வெளியேறினார்.
தனது 50-வது டெஸ்ட் போட்டியை விளையாடும் அஸ்வின் வேகமாக ரன்கள் குவித்தார். ஆனால், 47 ரன்களில் பிரதீப் பந்துவீச்சில் வெளியேறினார். ஓரளவு நல்ல தொடக்கம் கண்ட சாஹா, ஹராத் பந்துவீச்சில் 16 ரன்களில் வீழ்ந்தார்.
மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 503 ரன்கள் எடுத்துள்ளது. பாண்டியா 4, ஜடேஜா 8 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இலங்கைத் தரப்பில் பிரதீப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.