மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து. இதன்மூலம் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து அணியிலிருந்து விலகியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இடம்பெற்ற வோக்ஸ், காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியில் வெளியேறினார். அவர் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினார். ஸ்கேன் எடுத்தபிறகு காயத்தின் தன்மையை அறிந்து சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிருந்து விலகியுள்ளார் வோக்ஸ்.
இவருக்குப் பதிலாக ஸ்டீவன் ஃபின் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.