லண்டன்: கிரிக்கெட் போட்டிகளில் ஆடுகள நடுவரின் மறுபரிசீலனை செய்ய உதவும் டி.ஆர்.எஸ். முறையானது வரும் அக்டோபர் 1-ஆம் தேதி, டி20 போட்டிகளிலும் அமலுக்கு வர உள்ளது.
கிரிக்கெட் போட்டியில் ஆடுகள நடுவர்களின் தீர்ப்புகளை மேம்படுத்தும் பொருட்டு, அவர்களின் முடிவுகளை மறுபரிசீலனை செய்யும் முறையான டி.ஆர்.எஸ். (டிசிஷன் ரெவியூ சிஸ்டம்) 2009-ம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2009 நவம்பர் 24-ந்தேதி நடந்த டெஸ்டில்தான் டி.ஆர்.எஸ். முறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐ.சி.சி) அறிமுகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு இங்கிலாந்து அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்த பொழுதுதான் ஒருநாள் போட்டிகளில் டி.ஆர்.எஸ். முறை அமல்படுத்தப்பட்டது.
இவை இரண்டையும் தொடர்ந்து எஞ்சியுள்ள டி 20 ஓவர் போட்டியிலும் டி.ஆர்.எஸ். முறையை கொண்டு வருவது என்று ஐ.சி.சி. கடந்த பிப்ரவரி மாதம் முடிவு செய்தது. டி.ஆர்.எஸ். குறித்து ஐ.சி.சியின் கிரிக்கெட் விவகாரங்களுக்கான கமிட்டி பல்வேறு பரிந்துரைகளை தாக்கல் செய்து இருந்தது.
இந்த பரிந்துரைகள் அனைத்தும் ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாக குழுவால் ஒப்பு க் கொள்ளப்பட்டது. இதனை அடுத்து அக்டோபர் 1-ந்தேதி முதல் டி 20 ஓவர் போட்டியில் டி.ஆர்.எஸ்.முறை அமல்படுத்தப்படுகிறது.