

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித். இதையடுத்து டிஆர்எஸ் மூலம் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக எதிர்முனையில் நின்ற ஹேண்ட்ஸ்காம்பிடம் ஆலோசித்த ஸ்மித், அதன்பிறகு "டிரெஸ்ஸிங்' அறையில் இருந்த சகவீரர்களிடம் சைகை மூலம் ஆலோசனை கேட்டார். அதற்கு இந்திய கேப்டன் கோலி எதிர்ப்புத் தெரிவிக்க, ஸ்மித் உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து இரு நாட்டு வாரியங்களும் அறிக்கைகள் மூலம் மோதிக் கொண்டன. அதைத் தொடர்ந்து ஸ்மித், ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் மீது ஐசிசியிடம் வியாழக்கிழமை புகார் அளித்தது பிசிசிஐ.
இதன்பிறகு பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி சுதர்லேன்ட் ஆகியோர், வியாழக்கிழமை இரவு சந்தித்து இந்த விவகாரம் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். அப்போது இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது என முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஸ்மித், ஹேண்ட்ஸ்காம்ப் மீதான புகாரை பிசிசிஐ திரும்பப் பெற்றது.
இது தொடர்பாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "இந்தத் தொடரின் எஞ்சிய போட்டிகளில் கவனம் செலுத்தும் வகையில், டிஆர்எஸ் விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்னையை இரு நாட்டு வாரியங்களும் பேசி தீர்த்துக் கொண்டன' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் கோலி - ஸ்மித் மோதல் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள் பேசிவருகிறார். ஆஸ்திரேலிய இணையத்தளம் ஒன்றுக்கு முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கூறியதாவது:
விராட் கோலி, நிச்சயம் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடுபவர்தான். ஆனால் அவரால் இந்தத் தொடரில் ரன்கள் குவிக்க முடியாததால் வெறுப்படைந்துள்ளார். அதனால்தான் உணர்ச்சிகளுக்கு இடமளிக்கிறார். ஒவ்வொரு வீரரும் அவுட் ஆகும்போது அவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். அதனால் கேமராவும் அவர்மீது கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு ஆஸி. வீரரும் அவுட் ஆகும்போது, வழியனுப்பதலுக்குரிய சைகை செய்கிறார். இதில் அவர் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.