

டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும் முன்பு, ஆஸி. வீரர்களுடனான நட்பு பற்றி கோலி கூறும்போது இவ்வாறு கூறினார்: ஆடுகளத்துக்கு வெளியே அனைத்து வீரர்களுடன் நான் நல்ல நட்புறவுடன் இருக்கிறேன். ஆனால் அவர்களுடன் போட்டியிடும்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் எனத் தெரியும் என்று பேட்டியளித்தார். அப்போது எல்லாமே சுமூகமாகத்தான் இருந்தன.
ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பிரச்னைகள் ஆரம்பித்தன. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித். இதையடுத்து டிஆர்எஸ் மூலம் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக எதிர்முனையில் நின்ற ஹேண்ட்ஸ்காம்பிடம் ஆலோசித்த ஸ்மித், அதன்பிறகு "டிரெஸ்ஸிங்' அறையில் இருந்த சகவீரர்களிடம் சைகை மூலம் ஆலோசனை கேட்டார். அதற்கு இந்திய கேப்டன் கோலி எதிர்ப்புத் தெரிவிக்க, ஸ்மித் உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கோலி ஒரு கருத்து தெரிவித்தார். அதிலிருந்து இரு அணி வீரர்களும் எலியும் பூனையுமாகத்தான் இருக்கிறார்கள். கடைசியாக டெஸ்ட் தொடர் முடிந்தபிறகு, இந்திய கேப்டனான ரஹானேவிடம், ஓய்வறையில் உங்களுடன் சேர்ந்து நாங்களும் பீர் அடிக்கலாமே என்று கேட்டுள்ளார் ஸ்மித். இதனால் எல்லாம் நல்லவிதமாக முடிந்ததுபோல இருந்தது.
ஆனால் அப்படி கிடையாது என்று நிரூபித்துள்ளார் கோலி. தொடர் முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோலி என்ன சொன்னார் தெரியுமா?
ஆஸி. வீரர்களுடனான நட்புறவு இப்போது முன்புபோல இல்லை. டெஸ்ட் தொடருக்குப் பிறகு மாறிவிட்டது. உச்சக்கட்ட போட்டியில் நீங்கள் மிகவும் முனைப்புடன் விளையாடுவீர்கள் என்றே நினைத்தேன். ஆனால் என் கணிப்பு தவறாகிவிட்டது. நான் முதல் டெஸ்டில், சொன்னபோது இருந்த நிலை இப்போது மாறிவிட்டது. அதுபோல நட்புறவு குறித்து இனி நான் பேசப்போவதில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.