இந்திய கிரிக்கெட் அணி கோலியை மட்டும் நம்பியில்லை: கபில்தேவ்

சாம்பியன்ஸ் டிராபி போட்டியைப் பொறுத்தவரையில் இந்திய கிரிக்கெட் அணி கோலியை மட்டும் நம்பியில்லை என முன்னாள் இந்திய கேப்டனான கபில்தேவ் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி கோலியை மட்டும் நம்பியில்லை: கபில்தேவ்

சாம்பியன்ஸ் டிராபி போட்டியைப் பொறுத்தவரையில் இந்திய கிரிக்கெட் அணி கோலியை மட்டும் நம்பியில்லை என முன்னாள் இந்திய கேப்டனான கபில்தேவ் தெரிவித்தார்.
லண்டனில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தின் கிளை தில்லியில் அமைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில், அங்கு கபில்தேவின் மெழுகுச் சிலை திறக்கப்பட்டுள்ளது. அதை வியாழக்கிழமை பார்வையிட்ட கபில்தேவ், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், கோலி ஃபார்மில் இல்லை. அது சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு கபில்தேவ் கூறியதாவது:
தர்மசாலாவில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியை பார்த்தீர்களா? அப்போது கோலி விளையாடாவிட்டால் இந்திய அணி தோற்கும் என எல்லோரும் கூறினார்கள். ஆனால் அதில் என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
கோலி சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்தியாவால் வெற்றி பெற முடியும் என நினைத்துக் கொண்டு மற்றவர்களை குறைத்து மதிப்பிடுவது நியாயமற்றது. இந்திய அணியில் கோலி முக்கியமான வீரர்தான். தலைசிறந்த வீரரான அவருக்கு எப்படி விளையாட வேண்டும், எப்போது விளையாட வேண்டும் என்பது தெரியும். இந்திய அணி நல்ல நிலையில்தான் இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாகவே இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. போட்டி நடைபெறும் தினத்தில் அவர்கள் தங்களின் வியூகத்தை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும். சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் தகுதி நிச்சயம் இந்திய அணிக்கு இருக்கிறது. அதேநேரத்தில் எதிரணிக்கு நெருக்கடியை கொடுப்பது மிக முக்கியமானதாகும் என்றார்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியின் வெற்றியில் பெளலர்கள் யாராவது முக்கியப் பங்கு வகிப்பார்களா என கபில்தேவிடம் கேட்டபோது, "ஒரு பெளலர் மட்டும் சிறப்பாக செயல்பட்டால் போதாது. அனைவரும் ஓர் அணியாக இணைந்து செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும். யாராவது ஒரு பெளலர் முன்னின்று வழி நடத்தலாம். ஆனால் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தும்போதுதான் அதிக அளவில் வெற்றிகளைப் பெற முடியும். இப்போதுள்ள இளம் வீரர்கள், எங்களைவிட அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் அமெச்சூர் வீரர்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் தொழில்முறை வீரர்கள்' என்றார்.
உங்களைப் போன்ற ஆல்ரவுண்டர்கள் இதுவரை கிடைக்கவில்லை. எப்போது உங்களைப் போன்ற ஆல்ரவுண்டர்கள் இந்திய அணிக்கு கிடைப்பார்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த கபில்தேவ், "அதற்கு வாய்ப்பில்லை. தற்போதைய நிலையில் என்னைவிட சிறந்த ஆல்ரவுண்டர்கள் 100 பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரும் வேகப்பந்து வீச்சாளர்களாக இல்லை. அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருமே இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த ஆல்ரவுண்டர்கள்தான். தற்போதைய நிலையில் இந்திய அணியில் போதுமான ஆல்ரவுண்டர்கள் இருப்பதாகவே நினைக்கிறேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com