இந்திய அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளராகத் திகழ்ந்தவர் ஆஷிஷ் நெஹ்ரா. காயங்களால் அவதிப்பட்டாலும் அதிலிருந்து மீண்டு இந்திய அணிக்குத் திரும்பும் திறன் பெற்றவர்.
சர்வதேச அரங்கில் சுமார் 18 வருடங்களாக விளையாடினாலும் தொடர் காயம் காரணமாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 உட்பட அனைத்து வகை கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தம் 164 போட்டிகளில் மட்டுமே விளையாடி 235 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
கடந்த நியூஸிலாந்து டி20 தொடருடன் தனது 38-ஆவது வயதில் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.
இந்நிலையில், ஆஷிஷ் நெஹ்ரா புது அத்தியாயமாக தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கினார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கையுடனான இந்த டெஸ்ட் தொடர் முதல் தொலக்காட்சி வர்ணனையாளராக களமிறங்கினார் ஆஷிஷ் நெஹ்ரா. அதற்கு, ''நெஹ்ரா ஜீ வர்ணனையாளராக களமிறங்கியுள்ள உங்களை வரவேற்கிறேன்'' என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
சேவாக் மற்றும் நெஹ்ரா ஆகியோர் ஆரம்ப காலத்தில் தில்லி அணி மற்றும் இந்திய அணிக்காக ஒன்றாக கிரிக்கெட் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.