இணைக் கேப்டன் பதவியளித்து சிறுவன் ஆர்ச்சியை கௌரவப்படுத்திய ஆஸி. கிரிக்கெட்

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 7 வயது சிறுவன் ஆர்ச்சி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வழிநடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கௌரவப்படுத்தியுள்ளது. 
இணைக் கேப்டன் பதவியளித்து சிறுவன் ஆர்ச்சியை கௌரவப்படுத்திய ஆஸி. கிரிக்கெட்
Updated on
2 min read

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 7 வயது சிறுவன் ஆர்ச்சி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வழிநடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கௌரவப்படுத்தியுள்ளது. 

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டிச.26 தொடங்கி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு 7 வயது சிறுவன் ஆர்ச்சியை இணைக் கேப்டனாக சனிக்கிழமை அறிவித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கௌரவப்படுத்தியுள்ளது.

அடிலெய்ட் மாகாணத்தைச் சேர்ந்த ஆர்ச்சி, லெக்-ஸ்பின்னர் ஆவார். அவர் டிச.22-ஆம் தேதி தனது 7-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில் இச்செய்தியை சொல்லி அவருக்கு ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் இன்ப அதிர்ச்சி அளித்தார். இவை அனைத்தும் மேக் ஏ விஷ் ஆஸ்திரேலியா எனும் திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சிறுவன் ஆர்ச்சி குறித்து அவரது தாயார் கூறியதாவது,

பிறந்த 3-ஆவது மாதத்தில் அவனுடைய இருதய செயல்பாடுகளில் அரிய வகை பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அப்போது முதல் அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் 9 மாதக் குழந்தையாக இருந்தபோது மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை செய்ய 7 மணி நேரங்களாகும்.

தற்போது டிசம்பர் மாத துவக்கத்தில் மீண்டும் 3-ஆவது முறையாக இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் எனது மகனின் ஆயுட்காலம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். 

பள்ளி மற்றும் நண்பர்கள் இல்லாதது குறித்து அவன் என்னிடம் வருத்தப்படுவான். மேலும் அவர்களுடன் விளையாட முடியாதது குறித்து கூறும்போது வேதனையாக இருக்கும். எனவே ஆர்ச்சியின் கனவுகளை நினைவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றார். 

ஆர்ச்சி மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் சிரமமான சூழலில் உள்ளனர். கிரிக்கெட் மீது ஈர்ப்பு கொண்ட ஆர்ச்சி, தனக்கு ஆஸ்திரேலிய கேப்டனாக வேண்டும் என தனது தந்தையிடம் தெரிவித்துள்ளான். எனவே அவனது கனவை நிறைவேற்ற உள்ளோம். இத்தனை சிறு வயதில் ஆர்ச்சியின் வாழ்க்கைப் போராட்டம் எங்களுக்கெல்லாம் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்தார்.   

இவ்வாறு கிரிக்கெட் ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் தங்கள் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com