தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா தொடரை வென்றது. இருப்பினும் கடைசி போட்டியில் இந்திய அணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது.
இதையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இந்நிலையில், டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளெஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது.
அதிகபட்சமாக கேப்டன் டூபிளெஸிஸ் 120 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். மோரிஸ் 37, டிகாக் 34, ஃபெலுக்வாயோ 27 ரன்கள் சேர்த்தனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3, சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.