/

2019 உலகக் கோப்பை தொடரில் குல்தீப், சாஹல்: விராட் கோலி சூசகம்!

2019-ஆம் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் குல்தீப், சாஹல் ஆகியோரது இடம் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி... 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:12 pm

Raghavendran

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் யசுவேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி விக்கெட்டுகளை அள்ளி வருகின்றனர். இதனால் அடுத்தடுத்து நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றனர்.

எனவே அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஜோடி டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர். ஆனால் அவற்றிலும் ஆடும் லெவனவில் இடம்பிடிப்பது கடினம் தான். குல்தீப், சாஹல் ஜோடி தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 3 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர், சராசரி 9.05 ஆகும். இதனால் அந்நிய மண்ணிலும் அவர்களின் பந்துவீச்சு ஜொலிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், குல்தீப், சாஹல் ஜோடியை அடுத்து நடைபெறவுள்ள 2019 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் சேர்க்கப்படுவது தொடர்பாக இந்திய கேப்டன் விராட் கோலி யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தற்சமயம் குல்தீப் மற்றும் சாஹலின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. அதுவும் இதுபோன்ற வெளிநாட்டு தொடர்களில் விக்கெட் வீழ்த்துவது அவர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் தங்களின் மதிப்பை அதிகரித்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்க ஒன்று. தங்களின் சுழற்பந்து மூலமாக எதிரணி மீது வலைவீசி விக்கெட்டுகளை குவித்து வருகின்றனர்.

ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக எட்டு விக்கெட்டுகளை இவர்களுக்கு வீழ்த்தி விடுகின்றனர். இது நம்பமுடியாத செயலாகும். பந்துவீசும் போது இவர்களின் தைரியம், தன்நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சி பாராட்டுதலுக்குரியது. அனைத்து வீரர்களுக்கும் ஒரு சரிவு காலம் ஏற்படும்.

ஆனால் இவர்களின் இந்த ஆட்டத்திறன் இப்படியே இருந்தால் வருகிற 2019 உலகக் கோப்பை தொடரில் தவிர்க்க முடியாத சக்தியாக குல்தீப், சாஹல் அமைவர் என்பதில் சந்தேகமில்லை. அடுத்த போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும் எந்த தவறும் இல்லை.

ஏனெனில் இவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் செய்யும் தவறுகளில் இருந்து தங்கள் திருத்திக்கொள்கின்றனர். தங்களின் ஆட்டத்திறனை மேம்படுத்த கடினமாக பயிற்சி செய்கின்றனர்.

எனவேதான் இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் இவர்கள் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவர். இதேபோன்று டெஸ்ட் போட்டிகளில் இடம்பிடிக்க இன்னும் சிறிது காலமாகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.