ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

இரண்டாவது டி20 ஆட்டம் தென் ஆப்பிரிக்கா வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:46 am

எழில்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்த டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா. இந்நிலையில், சென்சுரியனில் 2-ஆவது டி20 ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீசத் தீர்மானித்தது. இதையடுத்து, இந்திய வீரர்கள் களம் இறங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா ஜூனியர் டாலாவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி 'டக்' அவுட் ஆனார். இதையடுத்து, ஷிகர் தவன் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தபோது டுமினி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் கோலி வந்த வேகத்தில் கிளாசென்னிடம் கேட்ச் கொடுத்து 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். சுரேஷ் ரெய்னாவுடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினர். எனினும், 11-ஆவது ஓவரில் பெலுக்வாயோ வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார் ரெய்னா. அப்போது அவர் 24 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார். அணியின் ஸ்கோர் 90-ஆக இருந்தது. 
தோனி-மணீஷ் கூட்டணி: இளம் வீரரான மணீஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்தார் அனுபவம் மிக்க வீரரான விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி. இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தங்களது அரை சதத்தைப் பதிவு செய்தனர்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 48 பந்துகளில் 79 ரன்களும், தோனி 28 பந்துகளில் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியில் பும்ராவுக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு, ஷர்துல் தாகுருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு இது முதல் சர்வதேச டி20 போட்டியாகும்.
 

தென் ஆப்பிரிக்கா வெற்றி: 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடத் தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜே.ஜே.ஸ்மட்ஸ், உனத்கட் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டனி டுமினி களம் இறங்கி ஹென்ரிக்ஸுக்கு தோள் கொடுத்தார். எனினும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹென்ரிக்ஸை வெளியேற்றினார் ஷர்துல். அதிரடியாக விளையாடி 69 ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் கிளாசென் உனத்கட் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்தும், டேவிட் மில்லர் 5 ரன்களில் பாண்டியா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். டுமினி அரை சதம் பதிவு செய்தார்.

64 ரன்களுடன் டுமினியும், 16 ரன்களுடன் பெஹர்தீனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 18.4 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இந்தத் தொடரின் 3-ஆவது ஆட்டம் கேப் டவுனில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.