

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கேப் டௌனில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டூபிளெஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
டிவில்லியர்ஸ் 65, டூபிளெஸிஸ் 62 ரன்கள் சேர்த்தனர். இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் 4, அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 73.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அபாரமாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 208 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழத்தொடங்கியது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி மட்டும் 28 ரன்கள் சேர்த்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினர்.
36 ஓவர்கள் வரையில் சந்தித்துள்ள இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் அதிரடி காட்டிய பாண்டியாவும் 1 ரன்னுக்கு நடையைக் கட்டினார்.
அஸ்வின் 16, புவனேஸ்வர் குமார் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றிபெற இன்னும் 105 ரன்கள் தேவை என்ற நிலையில் கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது.
முதல் இன்னிங்ஸில் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து டேல் ஸ்டெயின் விலகினாலும், 2-ஆவது இன்னிங்ஸில் பந்துவீச்சில் அசத்தி வரும் ஃபிலாண்டர் 3, மோர்கல் 2, ரபாடா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர்களை திணறடித்து வருகின்றனர்.
இன்னும் 1 நாள் ஆட்டம் மீதமிருக்கையில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.