பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டிடம் பெங்களூரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்று, ரூ.4 கோடி மோசடி செய்துள்ள விபரம் தெரிய வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட். இவர் தற்போது இந்திய ‘ஏ’ அணி மற்றும் ஜூனியர் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
தற்பொழுது ராகுல் டிராவிட்டிடம் பெங்களூரில் உள்ள ஒரு நிதி நிறுவனம் ஒன்று ரூ.4 கோடி மோசடி செய்துள்ள விபரம் தெரிய வந்துள்ளது.
பெங்களூருவினைத் தலைமையிடமாகக் கொண்டு விக்ரம் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ராகுல் டிராவிட்டுக்கு நெருக்கமான நண்பரான முன்னாள் பத்திரிக்கையாளர் ஒருவரது பரிந்துரையின் பேரில் ராகுல் அந்த நிறுவனத்தில் 2014-ம் ஆண்டு சிறிய அளவில் முதலீடு செய்தார். 2015-ம் ஆண்டு அவரது பணம் திரும்பிச் செலுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மேலும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு அவரது நண்பர் கூறியதன் பேரில் டிராவிட் மீண்டும் ரூ.20 கோடி முதலீடு செய்தார். இதிலும் ரூ.16 கோடி அவருக்கு அடுத்த ஆண்டில் திரும்பி வந்து விட்டது.
ஆனால் 2017-ம் ஆண்டில் இருந்து அவருக்கு பணம் திரும்பச் செலுத்தப்படவில்லை. ரூ.4 கோடி பணம் அவருக்கு வரவேண்டி இருந்தது. இதற்கிடையே அந்த நிறுவனம் 800 வாடிக்கையாளர்களிடம் ரூ.500 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. அத்துடன் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், பிரகாஷ் படுகோனே ஆகியோரும் அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
தற்பொழுது இது தொடர்பாக ராகுல் பெங்களூர் சதாஷிவ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தன்னிடம் விக்ரம் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி ரூ.4 கோடியை மோசடி செய்து விட்டதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.