இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

கொச்சி கால்பந்து மைதானத்தைக் காப்பாற்ற சச்சின் முயற்சி! கிரிக்கெட் போட்டியை திருவனந்தபுரத்துக்கு மாற்ற கோரிக்கை!

இதையடுத்து பிசிசிஐ, கொச்சி ஒருநாள் போட்டியை திருவனந்தபுரத்துக்கு மாற்றவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன...

News image
Updated On :21 மார்ச் 2018, 12:35 pm

எழில்

சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வம் உள்ள கேரள மக்கள், கால்பந்து மைதானத்தைக் காப்பாற்ற தற்போது களமிறங்கியுள்ளார்கள். 

இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. நவம்பர் மாதம் இந்தியா - மே.இ. அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி, கொச்சியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு உடனடியாக கேரள கால்பந்து ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு கால்பந்து மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். கடந்த வருடம் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளது. கால்பந்து மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தால் கால்பந்துக்கென அமைக்கப்பட்ட புல்தரை பாதிக்கப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். ஜூனியர் உலகக் கோப்பைக்குப் பிறகு ஐஎஸ்எல் போட்டிகளும் இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளன. எனவே இது கால்பந்து மைதானமாகவே நீடிக்கவேண்டும் என்பது அவர்களுடைய விருப்பமாக உள்ளது. கேரள ஐஎஸ்எல் அணியின் வீரரான சிகே வினீத்தும் இதுகுறித்த தன் கருத்தை வெளியிட்டார். இதையடுத்து இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரியும் கொச்சி கால்பந்து மைதானத்தையும் அதன் ஆடுகளத்தையும் காப்பாற்றவேண்டும் என்று ட்விட்டரில் கோரிக்கை விடுத்தார். 

Story image

இவர்களுக்குப் பிறகு பிரச்னையைப் பிரபல கிரிக்கெட் வீரரும் கேரள ஐஎஸ்எல் அணியின் துணை உரிமையாளருமான சச்சின் டெண்டுல்கர் கையில் எடுத்தார். சர்வதேச கால்பந்து சங்கம் அங்கீகரித்த கால்பந்து மைதானம் குறித்து கவலைப்படுகிறேன். கேரள கிரிக்கெட் சங்கம் சரியான முடிவை எடுக்க வேண்டும். திருவனந்தபுரத்தில் கிரிக்கெட்டும் கொச்சியில் கால்பந்தும் நீடிக்கமுடியும். பிசிசிஐயின் வினோத் ராய், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். கிரிக்கெட் மற்றும் கால்பந்து ரசிகர்கள் என இரு தரப்பினரும் கவலைப்படக்கூடாது என்றார். இதற்கு செளரவ்
கங்குலியும் ஆதரவு தெரிவித்து பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து பிசிசிஐ, கொச்சி ஒருநாள் போட்டியை திருவனந்தபுரத்துக்கு மாற்றவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலம் கால்பந்து ரசிகர்கள், வீரர்கள் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் முயற்சிக்கு விரைவில் வெற்றி கிடைக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.