ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் செக் குடியரசின் குவிட்டோவாவை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா மற்றும் செக் குடியரசின் குவிட்டோவா ஆகியோர் மோதினர்.
2 மணி நேரம் 27 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 7-6 (7/2), 5-7, 6-4 என்கிற செட் கணக்கில் நவோமி ஒஸாகா வெற்றி பெற்றார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் தரவரிசையில் அவர் முதலிடத்துக்கு முன்னேறவுள்ளார்.
21 வயதான ஒஸாகா கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தையும் வென்றார். இதன்மூலம், அவர் அடுத்தடுத்து 2 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், அவர் எட்டியுள்ள புதிய மைல்கல்கள்:
டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கவுள்ள முதல் ஆசிய ஆண்/பெண் என்ற பெருமையை ஒஸாகா பெறவுள்ளார்.
அடுத்தடுத்து கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் இளம் வீராங்கனை என்ற பெருமையை ஒஸாகா பெற்றுள்ளார். முன்னதாக, மார்டினா ஹிங்கிஸ் 1998-இல் அடுத்தடுத்து 2 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்ததே சாதனையாக இருந்தது.
கரோலின் வோஸ்னியாகிக்கு (2010) பிறகு, முதல் இடத்தை பிடிக்கும் முதல் இளம் வீராங்கனை என்ற பெருமையை ஒஸாகா பெற்றுள்ளார்.