

தியோதர் கோப்பைக்கான கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா பி - இந்தியா சி அணிகள் இன்று விளையாடின.
ராஞ்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா சி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இரு பேட்ஸ்மேன்கள் தவிர மற்ற மேல்வரிசை, நடுவரிசை வீரர்களால் அதிக ரன்கள் எடுக்க முடியவில்லை. விராட் சிங் 76 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 32-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 34 ரன்களில் ஆட்டமிழந்தபோது இந்தியா சி அணி 5 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்துத் தடுமாற்றத்துடன் இருந்தது. அதன்பிறகு களமிறங்கிய ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்துத் தன்னுடைய அணிக்குக் கெளரவமான ஸ்கோரைப் பெற்றுத் தந்தார். 61 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்னிங்ஸின் கடைசிப் பந்தில் 3 ரன்கள் எடுத்தால் சதமெடுக்கலாம் என்கிற நிலையில் அவரால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்தியா பி அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. பாபா அபராஜித் மட்டுமே நிலைத்து நின்று விளையாடினார். அவரைத் தவிர மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறியதால் இந்தியா பி அணி, 43.4 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாபா பொறுப்புடன் விளையாடி 53 ரன்கள் எடுத்தார். இந்தியா சி அணித் தரப்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் தியோதர் கோப்பை கடைசி லீக் ஆட்டத்தில் 136 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா சி அணி.
திங்களன்று ராஞ்சியில் நடைபெறவுள்ள தியோதர் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா பி - இந்தியா சி ஆகிய அணிகள் மீண்டும் மோதவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.