சென்னை: மேற்கிந்தியத் தீவுகள் சென்றதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என்று பிசிசிஐயின் நோட்டீஸுக்கு தினேஷ் கார்த்திக் பதில் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. 34 வயதான அவர், அண்மையில் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டியின் அணியான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் விளம்பர நிகழ்வில் பங்கேற்றிருந்தார். அந்த அணியின் வீரர்கள் அறையில் தினேஷ் கார்த்திக் அமர்ந்திருப்பது போன்ற படங்கள் வெளியாகின.
இந்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமானதாகும்.
இதுதொடர்பாக விளக்கம் தருமாறு கேட்டு பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி வெள்ளிக்கிழமை தினேஷ் கார்த்திக்குக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏன் உங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கூடாது என நோட்டீஸ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரீபியன் தீவுகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தினேஷ் கார்த்திக் பிசிசிஐயிடம் அனுமதி பெறவில்லை. ஒப்பந்தத்தின்படி ஐபிஎல் தவிர வேறு எந்த தனியார் லீக் போட்டிகள் தொடர்பான நிகழ்வுகள், போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் சென்றதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என்று பிசிசிஐயின் நோட்டீஸுக்கு தினேஷ் கார்த்திக் பதில் அனுப்பியுள்ளார்.
அதில் அவர், 'கரீபியன் தீவுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்க நான் செல்லவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளரான ப்ரெண்டன் மெக்கல்லம் அழைத்ததால் அங்கு சென்றேன். எனவே மேற்கிந்தியத் தீவுகள் சென்றதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.