இந்திய கிரிக்கெட் அணிக்கு அவ்வப்போது புதிய யோசனைகளை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தருவதுண்டு. அதைக் கேட்டு கோலியும் சாஸ்திரியும் நடக்கவேண்டும் என்று அவசியமில்லை. இவர்கள் பாட்டுக்குச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நமக்கும் சுவாரசியமாக இருக்கும். அப்படியொரு யோசனையை முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி முன்வைத்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தரமாக இடம்பெறப் போராடும் ரோஹித் சர்மாவின் நிலை குறித்து ஒரு புதிய யோசனையை வழங்கியுள்ளார் செளரவ் கங்குலி. ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய அணிக்கு, ரஹானேவைத் தேர்வு செய்வதா இல்லை ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்வதா என்பதுதான் முக்கிய முடிவாக இருக்கும். உலகக் கோப்பைப் போட்டியில் ரோஹித் சர்மா அபாரமான ஃபார்மில் இருந்தார். ஆனால் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் அவர் அவ்வளவு சரியாக விளையாடவில்லை. ரஹானே, ஆஸ்திரேலியாவில் வழக்கம் போல விளையாடவில்லை.
என்னுடைய யோசனை என்னவென்றால் - உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவுக்குக் கிடைத்த நல்ல ஃபார்மைத் தொடரச் செய்து அவரை இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க வீரராகக் களமிறக்கவேண்டும். இதன்மூலம் ரஹானே நடுவரிசையில் இடம்பெற்று, தொடர்ந்து அணிக்கு உதவியாக இருக்கவேண்டும் என்று தன்னுடைய யோசனையைக் கூறியுள்ளார்.