டிராவில் முடிந்தது பகலிரவு பயிற்சி ஆட்டம்

​இந்தியன்ஸ் - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கிடையிலான 3 நாள் பகலிரவு பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read


இந்தியன்ஸ் - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கிடையிலான 3 நாள் பகலிரவு பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. டிசம்பர் 17-இல் முதல் டெஸ்ட் ஆட்டம் தொடங்குகிறது. 

அதற்கு முன்பு இந்திய அணி இரு மூன்று நாள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. முதல் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது. 

ஆஸ்திரேலியா ஏ உடனான 2-வது பயிற்சி ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற ரஹானே தலைமையிலான இந்தியன்ஸ் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தியன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 48.3 ஓவர்களில் 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸி. அணித் தரப்பில் அபாட், ஜேக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 32.2 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷமி, சைனி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பும்ரா 2 விக்கெட்டுகளும் சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

இதையடுத்து, 2-ம் நாளன்று இந்தியன்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடினார்கள். அற்புதமான ஷாட்களால் அனைவரையும் கவர்ந்தார் ஷுப்மன் கில். அவர் 65 ரன்களும் மயங்க் அகர்வால் 61 ரன்களும் எடுத்தார்கள். ரஹானே 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விஹாரி - ரிஷப் பந்த், ஆஸ்திரேலிய ஏ அணியின் பந்துவீச்சை அருமையாக எதிர்கொண்டார்கள். 

2-ம் நாள் முடிவில் இந்தியன்ஸ் அணி, 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்திருந்தது. விஹாரி 104, ரிஷப் பந்த் 103 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்றைய நாளின் கடைசி ஓவரில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகள் என 22 ரன்கள் எடுத்து சதமடித்து அசத்தினார் ரிஷப் பந்த்.

இந்த நிலையில், 3-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நேற்றைய ஆட்டத்துடன் டிக்ளேர் செய்த இந்தியன்ஸ் அணி ஆஸ்திரேலியா ஏ-வுக்கு 473 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தொடக்கத்தில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் அசத்த அந்த அணி 25 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடர்ந்து, களமிறங்கிய கேப்டன் அலெக்ஸ் கேரி 58 ரன்கள் எடுத்து நம்பிக்கையளித்து ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, இந்தியப் பந்துவீச்சாளர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. பென் மெக்டெர்மோட் மற்றும் ஜேக் வில்டர்மத் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து சதமடித்தனர். 75 ஓவர்கள் முடிவில் இரு அணி கேப்டன்களும் கைகுலுக்க ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலிய ஏ அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெக்டெர்மோட் ரன்களும், வில்டர்மத் 111 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணித் தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் ஹனுமா விஹாரி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com