நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுள்ளது. இதனால் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
தோல்விக்குப் பிறகு இந்திய அணி கேப்டன் பேட்டியளித்ததாவது:
வீரர்கள் மீது கடுமையாக நடந்துகொள்ளவேண்டியதில்லை. வெளிநாட்டில் இதுவரை 2 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடியுள்ளார் பிரித்வி ஷா. நன்றாக விளையாடி ரன்கள் சேர்ப்பது எப்படி என்பதை அவர் கண்டறிந்துகொள்வார். இயற்கையிலேயே அதிரடியாக விளையாடக் கூடியவர். அதிக ரன்கள் எடுப்பதற்கான வழியைக் கண்டுபிடித்து இந்திய அணிக்கு நிச்சயம் இனி நல்ல தொடக்கத்தை அளிப்பார் என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: மயங்க் அகர்வால் இந்த டெஸ்டில் பிரமாதமாக விளையாடினார். இரு இன்னிங்ஸிலும் பக்குவமாக விளையாடினார். பேட்டிங்கில் அவரும் ரஹானேவும் மட்டும்தான் ரன்கள் எடுத்து நீண்ட நேரம் விளையாடினார்கள். எங்கு விளையாடுகிறோம், ஆடுகளம் எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் வழக்கமாக எப்படி விளையாடி வெற்றி பெறுவோமோ அப்படி விளையாட முயலவேண்டும். நிறைய ரன்கள் எடுத்து பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான நிலையை உருவாக்கினால் பிறகு அவர்கள் தங்கள் வேலையைப் பார்த்துக்கொள்வார்கள். இது இந்த டெஸ்டில் நடக்கவில்லை என்பதால் பேட்ஸ்மேன்கள் இன்னும் அதிகப் பொறுப்பேற்கவேண்டும் என்றார்.
முதல் டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் 16, 14 ரன்கள் எடுத்தார் பிரித்வி ஷா.
2-வது டெஸ்ட், பிப்ரவரி 29 அன்று தொடங்குகிறது.