அக்டோபர் 2019 - செப்டம்பர் 2020 வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.
இதில், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.
கடந்த வருட பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஏ கிரேடில் இடம்பெற்ற தோனிக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 5 கோடி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் கிரேட் ஏ+, கிரேட் ஏ, கிரேட் பி, கிரேட் சி, என எந்தப் பிரிவிலும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து பிசிசிஐயின் இந்த நடவடிக்கைக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
2019 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு தொடர்ந்து ஓய்வில் உள்ளார் தோனி. கடைசியாக ஜூலை 10 அன்று நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் தோனி விளையாடினார். எனினும் மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி சார்பாக தோனி விளையாடவுள்ளார். இதில் நன்றாக விளையாடினால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற வாய்ப்புள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.