முதுகுப் பகுதியில் பிரச்னை ஏற்பட்டதால் முதல் தர கிரிக்கெட்டிலோ டெஸ்ட் ஆட்டங்களிலோ தோனி விளையாடுவதில்லை என முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார்.
ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான பத்ரிநாத், தோனி பற்றி கூறியதாவது:
எல்லாமே சரியாகப் போய்க்கொண்டிருக்கும்போது அதில் மாற்றம் செய்யக்கூடாது என்பதை தோனியிடமிருந்து கற்றுக்கொண்டேன். நமக்குத் தெரியாமலே ஏதோவொன்று எல்லாவற்றையும் சரியாக இயங்க வைக்கும். எனவே அதை நாம் தொடக்கூடாது. ஆடுகளத்தில் பணியைச் சரியாக முடிக்கும் அணிகளில் சிஎஸ்கேவும் ஒன்று.
எப்போது விளையாட வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வது முக்கியம். இத்தனை ஆண்டுகளாக விளையாடியதால் அவருடைய உடல் அதிகமாக உழைத்துள்ளது. அவர் முதல் தர கிரிக்கெட்டிலோ டெஸ்ட் கிரிக்கெட்டிலோ விளையாடாததற்கு ஒரு காரணம் உண்டு - அவருடைய முதுகுப் பகுதி அவரை மிகவும் தொந்தரவு செய்துள்ளது. ஏராளமான கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி அதிகமாக உழைத்துள்ள எல்லா விக்கெட் கீப்பர்களுக்கும் இதுபோல நேரிடும். தன்னால் இனி எவ்வளவு தூரம் விளையாட முடியும் என்பதை அவர் மதிப்பிட்டு வருகிறார். எப்போது விளையாட வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்யவேண்டும். தோனியைப் பற்றி ஏராளமான யூகங்கள் வெளியே வருகின்றன. அதில் எதுவும் உண்மையில்லை என்றார்.