இந்திய அணியின் அடுத்த தோனியாக ரோஹித் சர்மாவைக் காண்பதாக சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
ஒரு பேட்டியில் ரெய்னா கூறியதாவது:
ரோஹித் சர்மாவை அடுத்த தோனியாகக் காண்கிறேன். காரணம், அவர் நிதானமானவர், அடுத்தவர் சொல்வதைக் கேட்டுக்கொள்வார், வீரர்களுக்கு நம்பிக்கையை அளிப்பார், முக்கியமாக முன்னே நின்று அணியை வழிநடத்துவார்.
அனைவரையும் ஒரு கேப்டனாக எண்ணுவார். அவரின் தலைமைப் பண்பை நான் பார்த்துள்ளேன். வங்கதேசத்தில் ஆசியக் கோப்பையை நாம் வென்றபோது அவர் தலைமையில் நான் விளையாடியுள்ளேன். ஷர்துல், வாஷிங்டன், சஹால் ஆகிய இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளித்து உற்சாகப்படுத்தினார்.
தோனி அருமையான கேப்டன். ஆனால் தோனியை விடவும் அதிக ஐபிஎல் கோப்பைகளை ரோஹித் சர்மா வென்றுள்ளார். இருவருடைய தலைமைப் பண்பும் ஒரே மாதிரிதான் இருக்கும். உங்கள் கேப்டன் நீங்கள் சொல்வதைக் கேட்டாலே பல பிரச்னைகளைத் தீர்க்க முடியும். எனவே என்னைப் பொறுத்தவரை இருவரும் அற்புதமான கேப்டன்கள் என்று கூறியுள்ளார்.