ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற மகிழ்ச்சியான செய்தியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
நியூஸிலாந்துடனான முதல் ஒருநாள் ஆட்டத்தின் போது தொண்டை வறட்சி காரணமாக விலகிய கேன் ரிச்சர்ட்ஸன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்ட கேன் ரிச்சர்ட்ஸனுக்கு கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதன் முடிவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இந்த மகிழ்ச்சியான தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தொடர் பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டு வருகிறது.
அதிலும் ஒரு வீரருக்கு கரோனா அறிகுறி ஏற்பட்டது சக வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. தற்போது கரோனா பாதிப்பு இல்லை என்ற தகவல் அவர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கேன் ரிச்சர்ட்ஸன் 14 நாள்கள் சர்வதேசப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.