மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோவை அறியாத இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது.
மே.இ. தீவுகள் அணிக்காக 40 டெஸ்டுகள், 164 ஒருநாள், 91 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் 38 வயது பிராவோ. ஐபிஎல் போட்டியில் 2008 முதல் விளையாடி 151 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர்.
Djb47 Fashion Label என்கிற ஃபேஷன் தொடர்பான புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் பிராவோ. இந்தியாவில் இந்நிறுவனத்தின் அலுவலகம் அடுத்த வருடத் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஐஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிராவோ கூறியதாவது:
இந்தியா என்னை ஒரு பிராண்ட் ஆக உருவாக்கியுள்ளது. இந்தியா இன்றி என் மதிப்பு பாதியாகத்தான் இருக்கும். என்னுடைய சொந்த ஊரிலிருந்து மிகத் தொலைவில் உள்ள இந்தியாவில் எனக்கு பேரும் புகழும் இருப்பது பெரிய விஷயம். இதனால் இந்தியா என் மனத்துக்கு மிகவும் நெருக்கமானது. அதனால் தான் இசை, ஃபேஷன், கிரிக்கெட் என எதைச் செய்தாலும் அவற்றுடன் இந்தியாவும் தொடர்பில் இருக்கும்படிப் பார்த்துக் கொள்கிறேன்.
உடை உடுத்துவது எனக்கு மிகவும் பிடித்தமானது. இப்போது எனக்கென்று சொந்தமாக ஒரு பிராண்ட் உள்ளது. ரசிகர்கள் இதனுடன் தங்களை இணைத்துக்கொள்ள விரும்புகிறேன். என் நிறுவனத்தின் உடைகள் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லோரையும் கவரும். இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்கா என என்னுடைய நிறுவனத்தை விரிவுபடுத்த விரும்புகிறேன் என்றார்.