லக்னௌ ஐபிஎல் அணியின் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. லக்னௌ அணியை கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது.
இதன் தலைமைப் பயிற்சியாளராக ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆன்டி ஃபிளவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | லக்னெள ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அறிவிப்பு
இதுபற்றி கௌதம் கம்பீர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:
"ஐபிஎல் போட்டியில் மீண்டும் களமிறங்குவது பெரு மகிழ்ச்சியளிக்கக்கூடிய வாய்ப்பு. லக்னௌ ஐபிஎல் அணியில் என்னை ஆலோசகராக சேர்த்ததற்கு கோயங்காவுக்கு நன்றி. வெற்றி பெற வேண்டும் என்கிற நெருப்பு என்னுள் இன்னும் நன்றாகவே எரிகிறது."
40 வயதுடைய கம்பீர் இந்திய அணிக்காக 58 டெஸ்ட் ஆட்டங்களிலும், 147 ஒருநாள் ஆட்டங்களிலும், 37 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இரண்டு முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளார்.