சையத் முஷ்டாக் அலி டி20: ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய தமிழ்நாடு

தொடர்ந்து 3-வது வருடமாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இந்தியாவின் சிறந்த டி20 அணியாக உள்ளது தமிழக அணி. 
கேப்டன் விஜய் சங்கர் (கோப்புப் படம்)
கேப்டன் விஜய் சங்கர் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

சையத் முஷ்டாக் அலி கோப்பை அரையிறுதிச் சுற்றில் ஹைதராபாத்தை 90 ரன்களுக்குச் சுருட்டியது தமிழ்நாடு அணி. பிறகு இலக்கை எளிதாகக் கடந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

தமிழகம் தனது காலிறுதி ஆட்டத்தில் கேரளத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அரையிறுதியில் ஹைதராபாத்துக்கு எதிராக இன்று விளையாடியது.

தில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஹைதராபாத் பேட்டர்கள் சிக்ஸர்கள் அடிக்க ஆசைப்பட்டு தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தார்கள். தமிழக வேகப்பந்து வீச்சாளர் சரவண குமார் (32) சிறப்பாகப் பந்து வீசி 3.3 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஹைதராபாத் அணி, 18.3 ஓவர்களில் 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹைதராபாத் வீரர் தனாய் தியாகராஜன் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். இதர வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். தமிழக அணி தரப்பில் முருகன் அஸ்வின், முகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தமிழக அணி 3 ஓவர்களுக்குள் இரு விக்கெட்டுகளை இழந்தாலும் சாய் சுதர்சன் - கேப்டன் விஜய் சங்கர் பொறுப்புடன் விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். சாய் சுதர்சன் 34 ரன்களும் விஜய் சங்கர் 43 ரன்களும் எடுத்தார்கள். நடப்பு சாம்பியனான தமிழக அணி 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து 3-வது வருடமாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இந்தியாவின் சிறந்த டி20 அணியாக உள்ளது தமிழக அணி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com