வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்திலும் வெற்றி பெற்ற பாகிஸ்தான் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை வென்றது.
வங்கதேசத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இரண்டாவது டி20 ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஷான்டோ 40 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான், ஷஹீன் அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையும் படிக்க | 15-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில்தான்: ஜெய் ஷா உறுதி
109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அஸாம் களமிறங்கினர். அஸாம் 1 ரன்னுக்கு முஸ்தபிஸூர் ரஹ்மான் பந்தில் போல்டானார்.
இதன்பிறகு, ரிஸ்வானுடன் இணைந்த ஃபகார் ஸமான் பாட்னர்ஷிப் அமைத்தார். வெற்றிக்குத் தேவையான இலக்கு குறைவு என்பதால், ரன் ரேட் மெதுவாகவே உயர்ந்தது.
39 ரன்கள் எடுத்திருந்தபோது ரிஸ்வான் ஆட்டமிழந்தார். எனினும் ஸமான் அரைசதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார்.
ஸமான் 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இருஅணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.